

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமாராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா அரிசித் திட்டத்தின் கீழ் அரிசி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பாமாயில், பருப்பு, கோதுமை ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விலையில்லாப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைகளுக்கு விருப்பத்திற்கேற்ப கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது. கோதுமைக்கு மாற்றாக அரிசி கேட்பவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தேவையான தானியங்கள் இருப்பில் உள்ள நிலையில் தட்டுப்பாடு என்று கூறப்படும் செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை. பொய் நோக்கத்துடன் இத்தகைய செய்திகள் பரப்பப் பட்டு வருகிறது.
உணவுப்பாதுகாப்பு திட்டத்தில் இணைவதால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சில திருத்தங்களைச் செய்ய கோரியுள்ளோம். சில பகுதிகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப் படாதது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவது உறுதி.
இவ்வாறு கூறினார்.