Published : 19 Sep 2013 10:26 AM
Last Updated : 19 Sep 2013 10:26 AM

நீதிபதி பதவியை நீட்டிக்க ஜெயலலிதா மனு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக‌ கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதிக்குமாறும்,இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்குமாறும் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதியதாக 2 மனுக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஆஜராகி வந்த‌ பவானி சிங்கை கர்நாடக அரசு திடீரென கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீக்கியது.

இதனால் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பவானி சிங்கின் நீக்கத்துக்கு தடை விதிக்கமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவிற்கு தடைவிதிக்க‌ மறுத்ததது.

இது குறித்து கர்நாடக அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்துமாறும் உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக அரசு, பவானி சிங்கை நீக்குவதாக கடந்த 17-ஆம் தேதி புதிய அரசாணையை வெளியிட்டது.இதனால் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரனை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள‌து.

இந்நிலையில் ஜெயலலிதா நேற்று உச்சநீதிமன்றத்தில் இரண்டு புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,''சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா, இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார்.இதனால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே தற்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து வழக்கை விசாரிக்க அனுமதிக்க‌ வேண்டும்.

இதற்காக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும். சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய நீதிபதியை நியமித்தால் தீர்ப்பு வெளியாவது தாமதமாகும்.

அதே போல வழக்கு நேர்மையாக நடக்கவும் வாய்ப்பு இருக்காது. எனவே புதிய நீதிபதியை கர்நாடக அரசு நியமிக்கக்கூடாது. புதிய நீதிபதியை நியமிக்க கர்நாடக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்”என குறிப்பிட்டுள்ளார்.இதே போல‌ அரசு வழக்குரைஞரை மாற்றிய‌தற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில்,“சொத்துகுவிப்பு வழக்கில் இறுதி வாதம் முடியும் தருவாயில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் இனி மேல் ஆஜராகக் கூடாது என கர்நாடக அரசு திடீரென‌ உத்தரவு பிறப்பித்திருக்கிறது.உச்சநீதிமன்றத்தில்,பெங்களூர் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு விசாரனையில் உள்ள நிலையில் கர்நாடக அரசு அவரை நீக்கி இருப்பதன் பிண்ணனியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன.

எனவே கர்நாடக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரனை வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே வேளையில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் பவானி சிங் நீக்கம் தொடர்பாக திமுக பொது செயலாளர் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரனைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x