Published : 09 Feb 2014 03:25 PM
Last Updated : 09 Feb 2014 03:25 PM

பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய குப்பை தொட்டிகள்

குப்பைகளை மக்கள் தரம் பிரித்துக் கொட்டுவதற்காக பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகம் குவியும் பெசன்ட் நகர் கடற்கரையிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு குப்பைகளை தரம் பிரித்துக் கொட்டுவதற்காக புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை சிவப்பு நிற தொட்டியிலும் சுழற்சிக்கான குப்பைகளை நீல நிற தொட்டியிலும் கொட்ட வேண்டும். இந்த 3 தொட்டிகளும் துரு பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ளன.

எந்த வகை குப்பையை கொட்ட வேண்டும் என விளக்கும் வகையில் ஒவ்வொரு தொட்டியிலும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு பெசன்ட் நகரில் 15 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் சற்று வேறுபட்ட ஸ்டீல் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘குப்பைத் தொட்டி வைத்திருப்பதோடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படங்களும் ஒட்டப்பட்டுள்ளன. வீடுகளிலும் குப்பையை தரம் பிரிக்க இது ஊக்குவிக்கும். மேலும் பல இடங்களில் இதுபோன்ற குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x