Published : 30 Apr 2017 09:18 AM
Last Updated : 30 Apr 2017 09:18 AM

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி: சென்னை ஆட்சியர் தகவல்

சென்னை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் மகளிர் குழுக்கள் தொழில் தொடங்கவும், சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பயிலவும் கடனுதவி பெற விண்ணப் பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், ஜெயின் மதத்தினர் மற்றும் சிறுபான்மையின உறுப்பினர்கள் 60 சதவீதம் கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்கவும், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இந்த கடனுதவி, சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

கடன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மிகாமலும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

சென்னை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 60 சதவீதம் சிறுபான்மையினர் உறுப்பினர்களாக உள்ள சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க அதிகபட்சமாக ஒரு குழுவுக்கு ரூ.20 லட்சமும், நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.

தனி நபர் கடன் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க, தொழிலை அபி விருத்தி செய்ய, இலகுரக போக்கு வரத்து வாகனக் கடன் பெற அதிகபட்சமாக ரூ.20 லட்சம், 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். மேலும் தாய்கோ வங்கி மூலம் தனி நபர் கடன் திட்டத்தில் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி அல்லது தொழில்நுட்ப இளங்கலை கல்வி பயில ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் அதிகபட்சமாக 15 லட்சம் வரையிலும், முதுகலை கல்வி பயில ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வீதம் அதிகபட்சமாக 9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் கல்வி பயில ஆண்டுக்கு 4 லட்சம் வீதம் அதிகபட்சமாக 20 லட்சம் வரையிலும், 3 சதவீத வட்டியில் கல்விக் கடன் வழங்கப்படும்.

இக்கடனுதவி பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் இணைப் பதிவாளர்-கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியிலும் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மேற்கூறிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x