

ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள இடங்களில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களைப் பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு ஜிப்மர் எதிரே போராட்டம் தொடங்கியது. இறந்த சடலம்போல் தயாரிக்கப்பட்ட வைக்கோல் பொம்மையைச் சுற்றி அமர்ந்து பெண் ஊழியர்கள் ஒப்பாரி வைத்தனர். போராட்டத்துக்கு சங்க கௌரவத் தலைவர் சிஎச்.பாலமோகனன் தலைமை வகித்தார். ஜிப்மர் போராட்டக்குழுத் தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
“காலை 9 முதல் பகல் 12 வரை நடந்த எங்கள் போராட்டத்தினால் பணிகள் பாதிக்கப்படவில்லை. தினக்கூலி ஊழியர்கள் ஷிப்ட்டுகளில் தங்கள் பணியை முடித்து விட்டு அதற்கேற்றார் போல் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்” என்று சங்கத்தின் பொதுச் செயலர் பாஸ்கரன் கூறினார்.
போராட்டக்குழுத் தலைவர் முருகன் கூறுகையில்,” ஜிப்மர் மருத்துவமனையில் 13 ஆண்டுகளாக 850 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நியமனத்தில் முதலில் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரி ஒப்பாரி போராட்டம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டார்.