Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

பூட்டிக் கிடக்கும் சிறுதொழில் கூடத்தை ரேஷன் கடையாக மாற்ற வேண்டும்- எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை

எம்.ஜி. ஆர். நகர் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பூட்டிக்கிடக்கும் சிறு தொழில் கூடத்தை ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அசோக் நகர் அருகில் இருக்கும் எம். ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் கே.கே.நகர் முனுசாமி தெருவில் உள்ள அமுதம் அங்காடியிலிருந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ரேஷன் பொருட்களை எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு எடுத்து வருவதற்கு சுமார் 3 கி.மீ. தூரம் வரை நடக்கவேண்டி உள்ளது. சில சமயங்களில் பொருட்களைச் சுமக்க முடியாமல் ரூ. 60 கொடுத்து ஆட்டோவில் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எம். ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள சிறுதொழில் கூடம் கடந்த 10 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இந்த இடத்தை மாற்றி ரேஷன் கடையாக அமைத்துத் தரவேண்டும் என்று பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் ஜி. செல்வா கூறியதாவது :- கடந்த பல ஆண்டுகளாகப் பூட்டி இருக்கும் சிறு தொழில் கூடத்தைச் சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர். மக்களின் பயன்பாட்டிற்காகச் சிறுதொழில் கூடத்தை ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என்று கட்சி சார்பில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறுதொழில் கூடத்தை ரேஷன் கடையாக மாற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சிறுதொழில் கூடத்தை ரேஷன் கடையாக மாற்றுவதற்கு நுகர்பொருள் கழகம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுதொழில் கூடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வருவதால் அந்தத் துறையினரிடம் கோப்புகள் கொடுக்கப்பட்டு பரிசீலனை நடைபெற்று வருகிறது” என்றார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் இடத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்ற கே. கே. நகர் பகுதி ரேஷன் கடையின் லீஸ் முடிந்து விட்டதால் காலி செய்யவேண்டும் என்று வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றப்படும் ரேஷன் கடையை மக்கள் கோரிக்கையாக வைத்துள்ள சிறுதொழில் கூடத்திலேயே அமைத்துத் தரவேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x