Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

ரூ.4.64 கோடியில் ஸ்குவாஷ் ஆடுகளம், நீச்சல் குளம் - முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

திருச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், 4 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஸ்குவாஷ் ஆடுகளம், விளையாட்டு அரங்கம் மற்றும் வளாகம், நீச்சல் குளம், விடுதிகள் ஆகியவைகளை காணொளி காட்சி மூலம், முதல்வர் ஜெயலலிதா கடந்த 11-ம் தேதி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தை உருவாக்கும் வகையில், கடந்த 1992-ம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார்.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, பயிற்சி அளித்து, அவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் பல திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டு அரங்குகளை அமைத்து பராமரித்து வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், அண்ணா விளையாட்ட ரங்கில் ரூ. 16.10 லட்சத்தில் மரத்திலான தளம், கண்ணாடி தடுப்பு சுவர், மின்னொளி அமைப்பு, குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க ஸ்குவாஷ் ஆடுகளம், திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டரங்கில் ரூ 57.26 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள மின்னொளி வசதியுடன் கூடிய கூடைப்பந்து உள் விளையாட்டரங்கம், அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் ரூ 75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2,327.94 ச.மீ. பரப்பளவு கொண்ட நீச்சல் குளம், கரூர் மாவட்டத்தில் ரூ. 1.96 கோடியில் 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, கோகோ ஆடுகளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், கடலூர் மாவட்டத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி; திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ 60 லட்ச த்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மாணவியர்களுக்கான விடுதி என, மொத்தம் 4 கோடியே 64 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம், விடுதிகள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா கடந்த 11-ம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதுமட்டுமல்லாமல், அன்று, விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 80 லட்சத்தில் நீச்சல் குளம், திருநெல்வேலி மாவட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ. 3.50 கோடியில் செயற்கை இழை ஓடுதளப் பாதை, அரியலூர், நாமக்கல், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ரூ.55.55 லட்சம் மதிப்பில் விளையாட்டு மாணவ, மாணவியருக்கான விடுதிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 3 கோடியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் என, மொத்தம் 10 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விளையாட்டு சார்ந்த கட்டடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர் வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x