Published : 28 Nov 2014 11:12 AM
Last Updated : 28 Nov 2014 11:12 AM
சட்டசபையில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையை அகற்றி விட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது. அது உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
செஞ்சியில் திருமண விழா ஒன்றில் நேற்று அவர் பங்கேற்று பேசும்போது, “உள்கட்சி தேர்தலுக்கு பிறகு திமுக-வில் கோஷ்டி பூசல் இருக்காது. திமுக பிளவுபட்டதாக சில பத்திரிகைகள் விமர்சனம் செய்கின்றன.
ஜனநாயக முறையில் கட்சித் தேர்தலில் போட்டியிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சகஜம். தேர்தலுக்கு பிறகு அவை சரியாகிவிடும்.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. முல்லை பெரியாறு பிரச்சினை பெரிதாகி வருகிறது. இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதை முதல்வர் கேலி கிண்டல் செய்கிறார்.
வருகிற 4-ம் தேதி சட்டப் பேரவையை கூட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் அவர் முதல்வர் இருக்கையில் அமர்வாரா அல்லது நிதி அமைச்சருக்கான இருக்கையில் அமர்வாரா என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் ஜெய லலிதா அமர்ந்த இருக்கையை அகற்றிவிட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆனால் அது உண்மையா? பொய்யா? என்பது தெரியவில்லை. திமுக-வினர் ஒருங்கிணைந்து மீண்டும் ஆட்சி மலர ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT