Last Updated : 16 Jun, 2016 03:19 PM

 

Published : 16 Jun 2016 03:19 PM
Last Updated : 16 Jun 2016 03:19 PM

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவர் மேல்கல்விக்கு வழியில்லாமல் தவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,154 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் அரசுப் பள்ளி களில் 2-ம் இடம் பிடித்த கூலித் தொழிலாளியின் மகன் மேல் படிப்புக்கு வழி தெரியாமல் தவிக்கிறார்.

வேலூர் மாவட்டம் கந்திலி அடுத்த குமிடிக்கான்பட்டி அருகே வேங்கன்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல் உடைக்கும் கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் மோகன்வேலு (17), தனது வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவுள்ள கெஜல்நாயக் கன்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித் தார்.

இதில், நடந்து முடிந்த அரசு பொதுத் தேர்வில் 1200-க்கு 1,154 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் 2-ம் இடத்தை மோகன்வேலு பெற்றார்.

மோகன்வேலு மேல்கல்வி படிக்க வழியின்றி, தன்னார்வலர்கள் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மோகன்வேலு கூறியதாவது:

என்னுடன் பிறந்தவர்கள் 3 பேர். எங்களை படிக்க வைக்க என் தந்தைக்கு போதிய வருவாய் இல்லை. நான், கெஜல்நாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்தேன். கல்வி மீது இருந்த ஆர்வத்தால் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 481 மதிப்பெண்களை பெற்றேன். இதையடுத்து, தனியார் பள்ளி களில் பிளஸ் 1 படிக்க அனுமதி கிடைத்தும், அதற்கான கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லை.

இதனால், நான் படித்த பள்ளியிலேயே மேல்நிலைக் கல்வியை தொடர்ந்தேன். அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்தேன். எங்கள் வீடு அரசுப் புறம்போக்கு இடத்தில் உள்ளதால், எங்கள் வீட்டுக்கு பட்டா இல்லை. பட்டா இல்லாத காரணத்தால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. வீட்டில் உள்ள சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன். வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கூர்ந்து கவனித்து, அன்றைய பாடங்களை அன்றே படித்து மனப்பாடம் செய்து வந்தேன். கணக்கு பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கவேண்டும் என கடுமையாக உழைத்தேன். எங்கள் குடும்ப ஏழ்மையை விரட்ட வேளாண்மை கல்வி அல்லது மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான கட்டணச் செலவை ஏற்க வசதியில்லை.

இதனால், என் எதிர்கால கனவு பாதியில் நிற்கிறது. மேல்படிப்பு படிக்க வசதியில்லை. எனது தந்தையின் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியவில்லை. எனவே, வசதியுள்ளவர்கள் உதவி செய்தால், மேல்கல்வியிலும் சிறந்து விளங்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால், என் குடும்பம் உயர்வடையும் என்ற லட்சியம் மனதளவில் உள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுக்க அரசு முன் வரவேண்டும்” என்றார். | மாணவரின் தொடர்பு எண்: 9976832996

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x