Published : 03 Mar 2016 08:14 AM
Last Updated : 03 Mar 2016 08:14 AM

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு: மத்திய அரசின் கருத்தை கேட்டு தலைமைச் செயலாளர் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 18-02-2014 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்ட காரணத்தால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியம். இதன் காரணமாக மத்திய அரசின் கருத்தை கேட்டு 19-02-2014 அன்று தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தோம்.

எனினும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 25-04-2014 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது. அதன் பிறகு 02-12-2015 அன்று இந்த கேள்விகளுக்கு விடையளித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு பற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை வழக்கு விசாரணைக்கே வராமல் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த 7 பேரில் முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழலில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின்படி அவசியம் என்பதால், தமிழக அரசின் இந்த முடிவு குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கோரி இந்த கடிதத்தை அனுப்புகிறோம். .

இதற்கிடையே, மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளதால், 02-12-2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யும் தமிழக அரசின் உரிமை பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு ஞானதேசிகன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஏழு கேள்விகள் என்ன?

கடந்த 25-04-2014 அன்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தண்டனை குறைப்பு அதிகாரம் அரசியல் சட்டப் பிரிவு 72-ன்படி குடியரசுத் தலைவர், 161-ன் படி மாநில ஆளுநர், 32-ன்படி நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் உள்ளது. இதில் ஓர் அதிகாரத்தை பயன்படுத்திய பிறகு மீண்டும் இன்னொரு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா?

ஒரு வழக்கின் மீது 2 அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? இந்த அதிகாரத்தை மத்திய அரசு, மாநில அரசு என 2 அரசுகள் பயன்படுத்த நினைக்கும்போது, யாருடைய அதிகாரம் செல்லும்?

தண்டனை குறைப்புக்கு ஆளான ஒருவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தொடர்ந்து எஞ்சிய காலத்துக்கும் சிறையில் இருக்க வேண்டுமா? ஷிரத்தானந்தா வழக்கில் 14 ஆண்டுகள் என்ற சிறப்பு தண்டனை பிரிவை உருவாக்கலாம். அதில் தண்டனை குறைப்புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அளிக்கப்பட்டுள்ள உத்தரவை கருத்தில் கொள்ளலாமா?

மாநில அரசு தன்னிச்சையாக தண்டனை குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமா? இந்த சட்டபூர்வ கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியது நாட்டுக்கே அவசியம். ஆகவே, இந்த கேள்விகள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்” என கூறியது.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு 02-12-2015 அன்று தீர்ப்பளித்தது. அதில், “மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435(2)-ன்படி, மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அனுமதியுடன் விடுதலை செய்ய வேண்டும் என்பதாகும். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமையும் சிறையில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்” என்று கூறியது.

மேலும், இதன் அடிப்படையில் “ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை தமிழக அரசு விடுவித்தது சரியா, தவறா என்பதை 3 நீதிபதிகள் அடங்கிய வேறு அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 3 நீதிபதிகள் அமர்வு முன் இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x