Published : 14 Nov 2013 06:55 PM
Last Updated : 14 Nov 2013 06:55 PM

புயல் சின்னம்: தமிழக கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து நாகப்பட்டினம் அருகே நாளை மறுநாள் (நவ.16) -ம் தேதி) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, "வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று சென்னைக்கு தென் கிழக்கே 650 கி.மீ தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 680 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

இந்தத் தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 570 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து 16-ம் தேதி மாலை நாகப்பட்டினத்துக்கு அருகே கரையைக் கடக்கும். இதன் காரணமாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றார் ரமணன்.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 15-ம் தேதி முதல் பலத்த காற்று வீசக் கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தென் தமிழக கடலோரங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன் , தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x