Published : 22 Dec 2013 12:25 PM
Last Updated : 22 Dec 2013 12:25 PM

கால்டாக்ஸிகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்படுமா? - சென்னை மக்கள் பெரும் எதிர்பார்ப்பு

ஆட்டோக்களுக்கு விதிக்கப்பட்டது போல், கால்டாக்ஸிகளுக்கும் ஒழுங்குமுறை விதிகளை அரசு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவையை அரசு பஸ்களால் மட்டுமே போதிய அளவு பூர்த்தி செய்ய முடிய வில்லை. இதனால் ஆட்டோ, கால்டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில், பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் தனியார் நிறு வனங்கள், பல்வேறு பெயர்களில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்டாக்ஸிகளை இயக்கி வரு கின்றன. நேரடியாகவும் போன் அல்லது இன்டெர்நெட் மூலமும் கால்டாக்ஸிகளை அழைக்கலாம். கார்களில் உள்ள வசதிக்கு ஏற்ப குறைந்தபட்சம் 4 கி.மீ. தொலைவுக்கு ரூ.100, ரூ.120, ரூ.150, ரூ.180 என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். அதன்பிறகு கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுகிறது. 5 நிமிடத்துக்கு காத்திருப்பு கட்டணமாக ரூ.8 முதல் ரூ.10 வரை செலுத்த வேண்டும்.

இதுதவிர, பெட்ரோல், டீசல் விலை உயரும்போது கால்டாக்ஸி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திவிடுகின்றன. இப்படித்தான் இயங்க வேண்டும், இவ்வளவு கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்று ஆட்டோக்களுக்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், கால்டாக்ஸிகளுக்கு இப்படி எந்த விதிமுறைகளும் இதுவரை இல்லை.

இதுகுறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறியதாவது:

ஆட்டோக்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இணைந்து, விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகின்றன. ஆனால், கால்டாக்ஸிகளுக்கு விதிமுறைகள் இல்லாததால், அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் குறைந்தபட்ச கட்டணமே ரூ.100 வசூலிக்கின்றனர். அவர்களே மீட்டர்களைப் பொருத்துகின்றனர், அவர்களே கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்கின்றனர். இது என்ன நியாயம்? கால்டாக்ஸிகளுக்கும் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு சேஷசயனம் கூறினார்.

நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் (சிஏஐ) செகரட்டரி ஜெனரல் ஜி.ராஜன் கூறுகையில், ‘‘சென்னை போன்ற பெரிய நகரங்களில் கால்டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் சாதாரண கார்கள் முதல் அதிநவீன கார்கள் வரை இயக்குகின்றனர். அதற்கு ஏற்ப கட்டணத்தை வசூலிக்கின்றனர். இந்தக் கட்டண வசூல் நியாயம்தான் என்பதை யார் முடிவு செய்வது? மேலும், கார்களின் உறுதித்தன்மை, ஓட்டுநர்களின் அனுபவம் மற்றும் நம்பகத்தன்மை குறித்தெல்லாம் விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆட்டோவுக்கு உள்ளதைப்போல், கால்டாக்ஸிகளுக்கும் புதிய விதிமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும். நுகர்வோர், கால்டாக்ஸி உரிமையாளர்கள், அரசு என 3 தரப்பு பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கால்டாக்ஸிகள், ஒப்பந்த ஊர்திகளாகத்தான் இயக்கப்படுகின்றன.

இந்த வாகனங்களுக்கு மத்திய அரசுதான் போக்குவரத்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து கட்டணம் நிர்ணயிக்க முடியும். ஆனால், கால்டாக்ஸிகள் இயக்குவது தொடர்பாக மாநில அரசு புதிய விதிமுறைகளை வகுக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x