Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

சென்னையில் தொடர்ந்து குளிர் நிலவுவது ஏன்?

சென்னையில் அதிகாலை நேரங்களில் தரைக்காற்று சற்று அதிகமாக வீசுவதால் பகல் நேரங்களில் குளிராக இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பொங்கல் முடிந்த பிறகு குளிரின் தாக்கம் சற்றுக் குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக கடந்த ஒரு வாரமாக குளிர் நிலவுகிறது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும், அதேபோல் மாலை நேரங்களிலும் குளிர்க்காற்று அதிகமாக வீசுகிறது. கடும் குளிர் இருப்பதால் குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மார்கழி முடிந்து பல நாள்களாகியும் குளிர் அதிகமாக இருப்பது குறித்துச் சென்னை வானிலை மைய இணை இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:

வானில் மேகங்கள் இல்லாததால் நிலப்பகுதியில் உருவாகும் வெப்பக் காற்று மேலெழும்பி விடுகிறது. இதனால் நிலப்பகுதி குளிராக இருக்கிறது. மேலும் குளிர் காலங்களில் நிலப்பகுதியில் இருந்து கடல் நோக்கிச் செல்லும் ஈரப்பதத்துடன் கூடிய தரைக் காற்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை கடப்பதால் காலை நேரத்தில் குளிர் சற்று அதிகமாகத் தெரிகிறது.

இந்த மாதத்தில் குளிரின் அளவு எப்போதும் போலத்தான் உள்ளது. பொதுவாக சென்னை நகரில் குளிர்கால வெப்ப நிலை 21 டிகிரி ஆகும். கடந்த 19 ம் தேதி மட்டும்தான் இயல்பு நிலையான 21 டிகிரியில் இருந்து 19 டிகிரிக்குச் சென்றது.

மற்ற நாட்களில் எல்லாம் 22 அல்லது 23 டிகிரி வெப்ப நிலை உள்ளது. தற்போது கிழக்கு பகுதியில் காற்று விசி வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x