Published : 18 Jul 2016 11:05 AM
Last Updated : 18 Jul 2016 11:05 AM

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் 9-ம் நூற்றாண்டு சமணப் பள்ளி கண்டுபிடிப்பு

தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளியை தொல்லியல் ஆர்வலர் கள் கண்டுபிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உட்பட பல்வேறு இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப்பகுதியில் உள்ள கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இந்நிலையில், தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் இடையமடம் என்னும் கிராமத்தில் ராமநாதபுரம் தொல் லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பா ளர்கள் பரமசிவம், முத்துராமன், மிக்கேல்ராஜ், ராபர்ட் புரோமியர் ஆகியோர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளியை கண்டு பிடித்துள்ளனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு இடை யமடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மூலஸ்தானம், முன்மண்டபம், மானஸ்தம்பம் என்கிற அமைப்பில் இந்த இடையமடம் சமணப்பள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வக வடிவில் உள்ளது. முன் மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும், 17 செ.மீ. அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் உள்ளது.

அவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையிலும், முதுகின் பின்புறம் அதன் உடல் சுருண்டும் உள்ளது போன்ற இச்சிற்பம் மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது. எனவே இப்பள்ளி கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இங்கு கல்லாலான சித்தசக்க ரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டிடக் கலை அமைப்பில் உள்ளது.

மீன் சின்னங்கள்

முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிரெதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன் களின் இரு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப் புச் சிற்பமாகவும், கோட்டுருவ மாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத் தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமணர்களின் நான்கு வகைத் தானங்களில் ஒன்று மருத்துவ தானம். முன்மண்டபத்தின் சுவரில் ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. இப்பகுதியில் கொக்கிமுள் ஆதண்டை, சங்கஞ்செடி ஆகிய மூலிகைச் செடிகள் காணப்ப டுகின்றன. இதன் மூலம் சமண முனிவர்கள் இங்கு மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளதை அறிய முடிகிறது.

சமணப் பள்ளியில் நான்கு துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு சிதைக்கப்பட் டுள்ளது. மீதம் உள்ள மூன்று கல்வெட்டுகள் மூலம் இது கி.பி. 1180 முதல் கி.பி 1190 வரை அர சாண்ட மாறவர்மன் விக்கிரமபாண் டியன் காலத்தைச் சேர்ந்தது எனத் தெரிகிறது.

பாதக்கோயில் சமணப் பள்ளியில் இருந்து ஐம்பது அடி தூரத்தில் பாதக்கோயில் உள்ளது. நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம் உள்ளது. இதன் இரு தூண்களி லும் வணங்கிய நிலையில் உள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர் களின் தலைக்கு மேல் ஒரு குடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதக் கோயில் என்பது உறுதி யாகிறது.

கி.பி. 14-ம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளி யாக வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பின்பு இது சம ணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதி மன்னர்கள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப் பிடும்போது இடையமடம் குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப் பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகள வில் காணப்பட்டாலும் கட்டுமானப் பள்ளியாக தென் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.

எனவே இதை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாது காக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x