Published : 26 Nov 2014 10:53 AM
Last Updated : 26 Nov 2014 10:53 AM
கடலோர மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உருவான காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன்காரணமாக, 27-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கடலோர டெல்டா மாவட்டங்களிலும் தென் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 29-ம் தேதிக்கு மேல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச் சேரியிலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, “இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது வலுப்பெறாமல், இதே நிலையில் இருந்தாலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு’’ என்றார்.
ஏற்கெனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் 3 செ.மீ., பாம்பனில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT