Last Updated : 28 Mar, 2014 11:02 AM

 

Published : 28 Mar 2014 11:02 AM
Last Updated : 28 Mar 2014 11:02 AM

நிகர்நிலை பல்கலை.களில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு சேர்க்கை மும்முரம்: தனித்தனியே நுழைவுத்தேர்வு

பிளஸ்-2 தேர்வு முடிவடைந்த நிலையில் வரும் கல்வியாண்டுக்கான மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் பணியில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் முடி வடைந்தது. ஏறத்தாழ 8.45 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருக்கின்றனர். பிளஸ்-2 மாணவர் களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பில் சேரவே விரும்புவர். நன்கு படிக்கும் மாணவ-மாணவிகளில் ஒருசிலர் மருத்துவப் படிப்பில் சேர ஆர்வமாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. சீட்டுகள் அதிகமாக இருப்பதால், கலை-அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.ஏ. படிப்புகளில் சேர இடம் கிடைக்கிறதோ இல்லையோ, பி.இ., பி.டெக். படிப்புக்கு இடம் நிச்சயம். விருப்பமான கல்லூரி, விருப்பமான பாடம் கிடைப்பதில் வேண்டுமானால் நினைப்பது நடக்காமல் இருக்கலாம்.

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மும்முரம்

தனியார் தொழிற்கல்லூரிகளைப் பொறுத்தவரையில், 65 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாகவும் (மத, மொழி சிறுபான்மை கல்லூரிகள் என்றால் 50 சதவீதம்) எஞ்சிய இடங்கள் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படும்.

சுயநிதி கல்லூரிகளுக்கு 2014-2015-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி விரைவில் வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மருத் துவம், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.

தனித்தனி நுழைவுத்தேர்வு

செட்டிநாடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான அறிவிப்பையும், அதேபோல், எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளன. நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று அவை அறிவித்துள்ளன.

பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வுக்கு மே முதல் வாரத்தில் விண்ணப்பம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள் ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககமும், விவசாயப் படிப்புகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், கால்நடை மருத்துவம் தொடர்பான படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகமும் அடுத்தடுத்து வெளியிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x