Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வது எப்படி?- ஐஐடி புதிய திட்ட பணிகள்

சென்னையின் தலையாயப் பிரச்சினைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலில் இருந்து சென்னை மக்கள் எப்படி தப்பித்து செல்வது, வேறு சாலை வழியாக எவ்வளவு நேரத்தில் கடந்து செல்ல முடியும் உள்ளிட்ட தகவல்களை பெறும் வகையிலான புதிய தொழில்நுட்பப் பணிகள் சென்னை ஐஐடி-யில் நடந்து வருகின்றன. இப் பணிகள் முடிந்து நடைமுறைக்கு வந்தால் நெரிசலுக்கு ஒரு மாற்றுத் தீர்வாக அமையும் எனலாம்.

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 2000 -ம் ஆண்டு 50 லட்சத்து 12 ஆயிரத்து 810 ஆக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 10 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால், சாலை மேம்பாட்டுப் பணிகள் 4 சதவீதம் கூட நடப்பதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், சென்னை ஐஐடியில் நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டுக்காக மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் போக்குவரத்து தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பணிகள் ைநடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அறிவுசார்ந்த போக்குவரத்து முறை (Intelligent Transportation systems) என உருவாக்கப்பட்டு 3 பிரிவுகள் கொண்ட திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில், ஒன்றுதான் நிகழ்காலத்தில் போக்குவரத்து தகவல்கள் பெறும் வசதிகள் (Real-time traveller information systems) கொண்டதாகும். இத்திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைப்பது, முக்கியமான சாலைகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு, ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்பம் மூலம் கணினி மையத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்காக 100 மாநகர பஸ்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்படும்.

இந்த திட்டப் பணிகளில் ஈடுபட்டு வரும் சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஆர்.சிவா நந்தன், இணை பேராசிரியர்கள் கார்த்திக் கே.ஸ்ரீனிவாசன், வி.லலிதா தேவி, உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் ராமதுரை ஆகியோர் கூறியதாவது:

நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டுக்காக மையத்தின் மூலம் போக்குவரத்து துறையில், ஆராய்ச்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் அமல்படுத்துவது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒன்றுதான் நிகழ்காலத்தில் போக்குவரத்து தகவல்கள் பெறும் வசதிகள் திட்டம். இத்திட்டத்துக்காக, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இதற்கான செலவினங்களை மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை வழங்குகிறது.

6 இடங்களில் ஆய்வு

சின்னமலையில் - 2, மத்திய கைலாஸ் சாலை, எஸ்ஆர்பி டூல்ஸ், விஜயநகர், திருவான்மியூர் சாலையில் தலா ஒன்று என 6 இடங்களில் 3 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரம் கொண்ட கணினி திரைகள் அமைக்கப்படவுள்ளன. இவை கணினி மையத்துடன் இணைக்கப்படுகிறது.

சுமார் 30 கேமிராக்களும், 15 வயர்லெஸ் ஆன்டெனாவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு திரைகளிலும் 2 வழித் தடங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். எந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு நேரத்தில் சாலையை கடந்து செல்ல முடியும் என தகவல்கள் அளிக்கப்படும்.

இதை, அனைத்து வாகன ஓட்டிகளும், பஸ் பயணிகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அடுத்த 6 மாதங்களில் இந்த வசதியை இணையதளம் வழியாகவும் பெற வழிவகை செய்யப்படும். வீட்டில் இருந்து புறப்படும் முன் இணையதளத்தை பார்த்து பயண நேரத்தை திட்டமிட்டு செல்லலாம்.

இத்திட்டம் தற்போது முழுக்க, முழுக்க சோதனை ஓட்டப் பணிகளாகத்தான் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துவது குறித்து அடுத்தகட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும். மாநில அரசு விரும்பினால் செயல்படுத்தப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x