Published : 15 Jun 2016 07:41 AM
Last Updated : 15 Jun 2016 07:41 AM
முதல்வர் உத்தரவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் மனுக்களை பெறும் பணியை முதல்வர் தனி்ப்பிரிவு அதிகாரி கணேஷ் கண்ணா நேற்று முதல் தொடங்கினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 2-வது முறையாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். தொடர் வெற்றியை தனக்கு அளித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக புதிய நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தங்கள் மனுக்களை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கலாம். இதுதவிர வாரந்தோறும் செவ் வாய்க்கிழமைகளில் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலர், தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முகாமிட்டு மனுக்களை பெற்றுக்கொள்வார் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு நேற்று உடனடியாக நடைமுறைக்கு வந்தது. முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலர் ஜெ.கணேஷ் கண்ணா, தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முகாமிட்டு, ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார். முதல் நாளான நேற்று 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு உதவிகள் கேட்டு முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியிடம் மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பங்கேற்றார். தொடர்ந்து, வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT