Published : 16 Nov 2014 08:42 AM
Last Updated : 16 Nov 2014 08:42 AM

வண்டலூர் பூங்காவில் புலி மாயம்: சுற்றுப்பகுதி மக்கள் பீதி; தேடுதல் வேட்டை தீவிரம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் இருப்பிடத்தில் கட்டப்பட்டுள்ள அகழியின் வெளிப்புற சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு புலி மாயமாகிவிட்டது. அதை தேடும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பூங்காவை விட்டு புலி தப்பிவிட்டதாக சுற்றுப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பில் புலிகள் இருப்பிடம் உள்ளது. அதைச் சுற்றிலும் 7 மீட்டர் ஆழத்துக்கு அகழியும் அதற்கு வெளியே கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பிடத்தில் மொத்தம் 5 புலிகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் பத்மா என்ற புலிக்கு 12 வயதாகிறது. வித்யா, ஆர்த்தி, உத்ரா, நேத்ரா ஆகிய 4 புலிகளுக்கு 2 வயதா கிறது. இந்த 4 புலிகளுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியிருந்தார்.

புலிகளை அடைப்பதற்கான கூண்டுகள் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூண்டுகள் திறக்கப்பட்டிருக்கும். அப்போது, புலிகள் அகழிக்கு நடுவே சுற்றித் திரியும்.

இந்நிலையில், அகழியின் வெளிப்புற சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் காலை இடிந்து விழுந்தது. இதையடுத்து, புலிகளை உடனடி யாக கூண்டில் அடைக்கும் நடவடிக்கையில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குள் 4 புலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்துவிட்டனர். நேத்ரா என்ற 2 வயதுப் புலியை மட்டும் காணவில்லை. இதனால் பூங்காவில் இருந்து புலி தப்பிவிட்டதாக சுற்றியுள்ள பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பூங்கா உதவி இயக்குநர் சுதாகர் கூறியதாவது:

புலிகள் இருப்பிட அகழியின் சுற்றுச்சுவர் சுமார் 30 மீட்டர் நீளத்துக்கு இடிந்துவிட்டது. ஆனால், 4 புலிகள் கூண்டுக்குள்ளும், ஒரு புலி திறந்தவெளி இருப்பிடத்திலும் உள்ளன. அந்த 5-வது புலிகூட அதன் வாழிடத்தில்தான் உள்ளது. எந்த புலியும் பூங்காவை விட்டு தப்பவில்லை. அது கண்ணில் படவில்லையே தவிர, பூங்காவை விட்டு வெளியேறவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x