Published : 22 Feb 2014 04:13 PM
Last Updated : 22 Feb 2014 04:13 PM

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் ராமேஸ்வரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படுவதுடன் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமிக்க பொருட்களையும் இலங்கை படையினர் சேதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழக-இலங்கை இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழக மீனவர்கள் 121 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தற்போது யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வலியுறுத்தி சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக-புதுவை மீனவர் கூட்டமைப்பு தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மீனவப் பிரதிநிதிகள் தேவதாஸ், சேசு, சந்தியாகு, பாலசுப்பிரமணியன் மற்றும் மீனவ மகளிர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவப் பிரதிநிதி தேவதாஸ் கூறியதாவது, ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நாட்களை விட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் நடத்தியதே அதிகம். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 5 தங்கச்சிமடம் மீனவர்கள் கொழும்பு சிறையில் பொய்யாக புனையப்பட்ட வழக்கில் வாடி வருகின்றனர். அது போல கடந்த ஒரு மாத காலமாக 121 ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகைப்பட்டிணம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் வாடி வருகின்றனர். இலங்கைச் சிறைச்சாலையில் தமிழக மீனவர்களுக்கு முறையான உணவும், உறைவிடமும் வழங்கப்படுவதில்லை. இதனால் இவர்களின் உடல்நிலையும் மனநிலையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கொழும்பில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தையை காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும். மேலும் 30 ஆண்டுகாலமாக தொடரும் தமிழக மீனவர்களின் போராட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்குமேயானால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த மீனவ சமுதாயமே புறக்கணிக்கும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x