Published : 20 Jan 2014 04:51 PM
Last Updated : 20 Jan 2014 04:51 PM

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டம் குன்ன வலத்தில் டி.டி. மருத்துவக் கல்லூரி தொடங்க கடந்த 2010-ம் ஆண்டில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து 2010-11-ம் கல்வியாண்டில் 150 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.

எனினும் அடிப்படை வசதி கள் குறைபாடு உள்ளிட்ட காரணங் களை சுட்டிக்காட்டி 2011-12 மற்றும் 2012-13ம் கல்வியாண்டுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துவிட்டது.

மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காத நிலையிலும் அந்த இரண்டு ஆண்டுகளிலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களைச் சேர்த்தது. மருத்துவக் கவுன்சில் அனுமதி இல்லாததால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பிரச்சினை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். டி.டி. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தாங்கள் மருத்துவக் கல்வியைத் தொடர உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று அதில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதி கே.கே.சசிதரன் விசாரணை மேற் கொண்டார். விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, நீதிமன்றம் உத்தரவிட்டால் டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்துவது பற்றி பரிசீலிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி சசிதரன், டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

டி.டி. மருத்துவக் கல்லூரி யில் போதிய வசதிகள் இல்லை யென்பதால் 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கவில்லை.

இந்தத் தகவலை அப்போதே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அதுபற்றி தெரிவித்துள்ளது.

அதன் பிறகே அது குறித்து பல்கலைக்கழகம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் படிப்புக்கான ஆண்டுகளை இழந்துள்ளனர்.

டி.டி. மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த நீதிமன்றத்தின் அனுமதியை மாநில அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் அத்தகைய உத்தரவு எதையும் நீதிமன்றத்தால் பிறப்பிக்க இயலாது. பொது மக்களின் நலன் கருதி மாநில அரசே அது தொடர்பான கொள்கை முடிவு களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நீதிமன்றத்தைப் பொருத்தமட்டில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதில்தான் அக்கறை கொண்டுள்ளது.

ஏற்கெனவே 2010-11-ம் ஆண்டில் டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட வேண்டும். அவர்களை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் சேர்க்கும் வகையில் தேவையான கூடுதல் இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

அறக்கட்டளைக்கு எதிரான உத்தரவு ரத்து :

மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் தொடங்க விண்ணப்பிக்க முடியாத வகையில் டி.டி. மருத்துவக் கல்லூரி அறக்கட்டளை மற்றும் அதன் அறங்காவலர்களுக்கு தடை விதித்தும், அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்தும் இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டதை செல்லாது என்று நீதிபதி கூறியுள்ளார்.

அறக்கட்டளை மற்றும் அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமலும், அவர்கள் தரப்பு விளக்கங்களை கூற உரிய வாய்ப்பு அளிக்காமலும் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக அறக்கட்டளை மற்றும் அறங் காவலர்களுக்கு போதிய வாய்ப்பு அளித்து, அவர்களின் கருத்துகளை அறிந்து, அதன் பிறகு மருத்துவக் கவுன்சில் உரிய முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x