

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர்செல்வம், சின்னத்தை மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டைஇலைச் சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டைஇலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இரட்டைஇலை சின்னத்தையும் தமிழ்மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்