Published : 19 Apr 2017 12:45 PM
Last Updated : 19 Apr 2017 12:45 PM

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி: ஓபிஎஸ்

"அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இருதரப்பும் பேசி முடிவு எடுப்போம்" என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

"தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது" தமிழக அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். எம்ஜிஆர் பாதையில் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி வந்தார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்தது தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.

தொண்டர்களின், மக்களின் விருப்பத்திற்கு இணங்கவே நாங்கள் தர்மயுத்தம் தொடங்கினோம். சசிகலா குடும்பத்தை ஒதுக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளது அந்த யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. அடுத்து என்ன செய்யவேண்டும் என்று இருதரப்பும் பேசி முடிவெடுப்போம். எங்கள் தர்மயுத்தம் தொடரும்" என்றார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், மூத்த தலைவர் மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x