Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

தீர்வை நோக்கி இருநாட்டு மீனவர் பிரச்சினை- முதல்வரின் அதீத முயற்சியே காரணம் என மீனவ பிரதிநிதிகள் பாராட்டு

இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள் பிரச்சினை, தற்போது தீர்வை நோக்கிய திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்த அழுத்தமும் முதல்வர் எடுத்த அவசர நடவடிக்கைகளும்தான் என்று பாராட்டுகிறார்கள் மீனவ பிரதிநிதிகள்.

கடந்த 2011 ஜூன் மாதத்திலிருந்து இந்த மார்ச் வரை தமிழக மீனவர்கள் 1,303 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 244 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன. தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 2004, 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மூன்று முறை இலங்கை - தமிழக மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிலுமே தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கடுமையாக சாடினார்.

தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு இதுவரை அவர் எழுதிய கடிதங்கள் மட்டுமே நாற்பதை தொடுகிறது. இறுதியாக, இருதரப்பு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை தமிழகத்தில் ஏற்பாடு செய்யக் கோரி 20.09.13ல் பிரதமருக்கு கடிதம் எழுதினார் முதல்வர்.

339 பேர் விடுதலை

தொடர்ச்சியாக தமிழகம் கொடுத்த அழுத்தத்தின் பயனாக கடந்த ஜனவரி 27-ல் இலங்கை - தமிழக மீனவர்கள் பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. அதற்கு முன்பாக தமிழக - இலங்கை சிறைகளில் உள்ள இருதரப்பு மீனவர்களையும் விடுதலை செய்ய கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று இருதரப்பிலும் சிறையில் இருந்த மீனவர்களில் பெரும்பகுதியினர் விடுதலை செய்யப்பட்டனர். இதில், தமிழக மீனவர்கள் 317 பேரும் காரைக்கால் மீனவர்கள் 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையின் பிடியிலிருந்த 90 படகுகளும் படிப்படியாக விடுவிக்கப்பட்டன.

அதன்பிறகு திட்டமிட்டபடி நடந்த மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் இணக்கமான தீர்வுகள் எட்டப்பட்டன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இலங் கையில் நடத்தலாம் என முடிவானது. இந்நிலையில், இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை தொடர்ந்தது.

இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 172 மீனவர்களையும் 39 படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை. இந்த நடவடிக்கை இருதரப்பு மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இணக்கமான சூழலை கெடுப்பதுடன் அவர்களின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டனம் தெரிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், மார்ச் 13-ல் இலங்கையில் இருதரப்பு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யாமல் பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால், 13-ம் தேதி திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

அனைவரும் விடுவிப்பு

இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய உறுதியையடுத்து, முதல் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 172 பேரையும் 39 படகுகளையும் மார்ச் 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் படிப்படியாக விடுவித்தது இலங்கை அரசு. கிரிமினல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் யாருமே இப்போது இல்லை. இதையடுத்து, மார்ச் 25-ம் தேதி நடக்கும் இருதரப்பு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக தமிழக மீனவர்கள் குழு மகிழ்ச்சியுடன் இலங்கை செல்கிறது. இவர்களோடு தமிழக அரசுப் பிரதிநிதிகளாக மீன்துறை செயலர், இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையாளர்களாக செல்ல உள்ளனர்.

‘நீண்டகாலமாக நிலவி வரும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை, தீர்வுக்காணும் திசையில் சென்று கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தமும் முதல்வர் எடுத்த அதீத நடவடிக்கைகளும்தான் இதற்கு காரணம் என மீனவ பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x