

விவசாய சங்கங்கள் வரும் 30-ம் தேதி நடத்தவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் ஆட்சி ஆதரவு தெரிவித்து பங்கேற்கவுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எம்.ஹூசைன் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற்று சம்பா சாகுபடிக்கு வழங்கிட வேண்டி மத்திய அரசை வலியுறுத்தியும், முல்லைப்பெரியாறு, பாலாறு உரிமைகளை மீட்டிடவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைத்திடவும், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையம் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.
காவிரியை நம்பி தமிழகத்தில் வாழும் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடக்கவுள்ள இந்த போராட்டங்களில் மமக தொண்டர்கள் பங்கேற்பார்கள். மேலும், அன்றைய தினம் தாம்பரத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை தாங்குவார்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.