தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கை அரசு மீது வாசன் குற்றச்சாட்டு

தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கை அரசு மீது வாசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு கடற்படை இல்லை என்பதால்தான் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.

தூத்துக்குடியில் அவர் இன்றும் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால், இந்திய - இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னையில் நடந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டு, அந்த முடிவுகளை இருநாட்டு அரசுகளும் பரிசீலனை செய்து ஒத்த கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மேலும், 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது எனவும், அதுவே நிறைவு தரும் பேச்சாக அமையும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கடற்படை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் மீண்டும் இரண்டு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீனவர் பேச்சுவார்த்தை நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கை சுமுகத் தீர்வுக்கு இடையூறாக அமையும்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்த பேச்சுவார்த்தை சுமுகமாக அமையும்.

இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் எச்சரிக்கையுடன், அதேநேரத்தில் வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது" என்றார் ஜி.கே.வாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in