Published : 13 Feb 2017 07:33 AM
Last Updated : 13 Feb 2017 07:33 AM

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் உயிரிழப்பு இல்லாத ஜல்லிக்கட்டு: திட்டமிட்ட ஏற்பாடுகளால் சாதித்த அதிகாரிகள்

மதுரை மாவட்டத்தில் அலங்காநல் லூர் உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், சட்ட விதிகளுக்கு உட்பட்ட திட்டமிட்ட ஏற்பாடுகளால் சிறப்பாக நடந்து முடிந்ததுடன், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டு நடந்தாலே உயிரிழப்பு தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு முடியும் போதும் இறந்தவர், காயமடைந் தவர் விவரங்களை மட்டுமே பெரிதாக எதிர்பார்க்கும் நிலை இருந்தது. மாடுபிடி வீரர்களைவிட பார்வையாளர்களே அதிகம் பேர் பாதிக்கப்படுவர். 2008-ம் ஆண்டுக்குப் பிறகு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்தன. இதன் பின்னர் உச்ச நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்த விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்ததால், 2014-ம் ஆண்டுவரை நடந்த ஜல்லிக்கட்டில் குறிப்பிடும்படியாக உயிரிழப்பு ஏதும் இல்லை. 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைபட்ட நிலையில், புதிய சட்டத்தின் மூலம் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.

அப்போது, அவசரகோலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டி நடத்தப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் 4 பேரும், விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத் தில் நடந்த ஜல்லிக்கட்டில் காவலர் ஒருவரும் இறந்தனர்.

அதேநேரம் மதுரை மாவட்டத் தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 549 காளைகள், 1,500 வீரர்கள், பாலமேட்டில் 354 காளைகள், 1,465 வீரர்கள், அவனியாபுரத்தில் 350 காளை கள், 936 வீரர்கள் களத்தில் விளையாடினர். இவ்வளவு பேர் பங்கேற் கும், பலநூறு காளைகளை அடக்கியும் 185 வீரர்களே காயமடைந்தனர். இதில் 169 பேர் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினர். 16 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சிறு காயமடைந்த 5 காளைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டன.

இவ்வளவு பெரிய ஜல்லிக்கட்டு திருவிழா உயிரிழப்பு, அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் சிறப்பாக நடக்க ஆட்சியர் வீரராகவ ராவ், கோட்டாட்சியர் செந்தில்குமாரி, தென்மண்டல ஐஜி முருகன், எஸ்பி சக்திவேல்(பொறுப்பு) மற்றும் கால்நடை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் மட்டுமின்றி விழாக்குழுவினரும், பங்கேற்பாளர் களும் முக்கிய காரணமாக இருந் தனர்.

3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் ஆரம்பம் முதல் முடிவு வரை மாவட்ட ஆட்சியர் நேரில் இருந்து கண்காணித்தார். விதிமீறல் இருந் தால் அவற்றை ஒலிப்பெருக்கியில் அறிவித்து சரி செய்தார். இதனால் மற்ற துறை அதிகாரிகளும் மிகவும் கவனமாகவும், ஈடுபாட்டுடனும் பணியாற்றினர்.

இதுகுறித்து ஆட்சியர் வீரராகவராவ் கூறும்போது, ‘பார்வை யாளர்களுக்காக பாதுகாப்பு வேலி, காளைகளின் கொம்பு கூர்மையை சரி செய்தது, பாரபட்சமற்ற மது பயன்பாடு பரிசோதனை, கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை, தகுதியான காளைகள், வீரர்களை மட்டுமே களத்தில் இறக்கியது, வீரர்களை குழு, குழுவாக மட்டுமே அனுமதித்தது என பல காரணங்களைக் கூறலாம்.

அரசின் விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டன. காளைகளின் கொம்பு, வாலை பிடித்த வீரர்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டனர். களத்தில் இருந்து வெளியேறிய காளைகளை உடனுக்குடன் உரிமையாளர்கள் அழைத்துச் சென்றது, பலத்த போலீஸ் பாதுகாப்பு என பல விஷயங்கள் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டது ஜல்லிக் கட்டுப் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற பெரிதும் உதவின.

நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை விழாக்குழு சரியாக நிறை வேற்றியது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அருமை யாக இருந்தது. ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவின் பங்களிப்பு மகத்தானது. அனைத்து துறை யினரின் ஒருங்கிணைப்பு, ஆர்வலர்களின் ஈடுபாடு என அனைவருமே இந்த சிறப்புக்கு காரணமானவர்கள்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x