திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
Updated on
2 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

கந்த சஷ்டி விழா

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானது. சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால், இங்கு நடைபெறும் சூரசம்ஹார விழா வுக்கு, உலகம் முழுவதும் இருந்து முருகப் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்களாக, தினமும் காலை 3 மணிக்கு விஸ்வரூபத் தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் உலா, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சூரசம்ஹாரம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்

படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபத் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்றக் காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.

காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 12.45 மணிக்குச் சண்முக விலாசத்துக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் புறப்படு கிறார். மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீனச் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங் காரம் நடைபெறும். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காகக் கடற்கரை யில் எழுந்தருளுகிறார். அங்குக் கஜ முகம், சிங்க முகம், மற்றும் மாமரமாக மாறிப் போரிட வரும் சூரபத்மனை வதம் செய்து, சேவ லாகவும் மயிலாகவும் மாற்றி, தன்னுள் ஆட்கொள்கிறார்.

சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோவில் சேருகிறார். இரவு, 108 மகாதேவர்சந்நதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்குச் சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறும்.

பக்தர்கள் குவிந்தனர்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டுக் கடந்த 5 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீடுகளில விரதம் மேற்கொண்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும், தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். வியாழக்கிழமை காலை முதலே பக்தர்கள் திருச்செந்தூர் வரத் தொடங்கினர். மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை முதல் திருச்செந்தூர் நகரம் முழுவதும் மனிதத் தலைகளாகவே காட்சியளிக்கும்.

விரிவான ஏற்பாடுகள்

சூரசம்ஹாரத்துக்காக திருச் செந்தூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. முக்கியப் பிரமுகர்கள் சூரசம் ஹாரத்தைக் காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டத்தைக் காவல் துறையினர் கண்காணிக்கக் கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரசம்ஹாரத்தைப் பக்தர்கள் காண வசதியாக நாழிக்கிணறு பஸ் நிறுத்தம் பகுதியிலும், வேலவன் விடுதி பகுதியிலும் இரண்டு பெரிய டி.வி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

100 சிறப்புப் பேருந்துகள்

சூரசம்ஹாரத்தை முன்னிட்டுத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சுமி சரண், மாவட்ட எஸ்.பி., ம.துரை ஆகியோர் தலை மையில் திருச்செந்தூரில் 1,000 போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்களுக்குத் தடை

வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் நகருக்குள் எந்த வாகனமும் அனு மதிக்கப்படமாட்டாது. நுழைவுச் சீட்டு பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. பஸ்களை நிறுத்த தூத்துக்குடி சாலையில் அரசு போக்குவரத்துக் கழகம் அருகேயும், திருநெல்வேலி சாலையில் குமாரபுரம் தீயணைப்பு நிலையம் அருகேயும், நாகர்கோவில் சாலை யில் தெப்பக்குளம் அருகேயும் தற்காலிகப் பஸ் நிலையங்கள் செயல்படும்.

மேலும், திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சார்பில் மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. கடற்கரையில் பக்தர்

களின் உதவிக்குத் தீய ணைப்பு படையினர் மற்றும் மீன்வளத்துறையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) இரா. ஞானசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in