Published : 23 May 2017 08:43 AM
Last Updated : 23 May 2017 08:43 AM

உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு: இந்த ஆட்சிக்கு ஒரு பாடமாக அமையும் - விழுப்புரம் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

விழுப்புரம் மாவட்ட அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சிப் பணி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்தது. லட்சுமணன் எம்.பி. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தொண்டர்கள் இயக்கமாக இருந்த கட்சி இப்போது ஒரு குடும்பத்தினரின் ஆளுகையில் உள்ளது. அதனை மீட்டெடுக்கவே இந்த யுத்தம். தமிழக அரசு ஜெயலிதாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு இந்த ஆட்சிக்கு ஒரு பாடமாக அமையும். ஸ்டாலின் எப்படியாவது ஆட்சியை பிடிக்க காய் நகர்த்துகிறார். அதிமுக முழுவதும் நம்மிடம்தான் உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது ஜெயலலிதா. காவிரி நீரை மத்திய அரசிடம் பேசி வாங்காமல் இருந்திருந்தால் சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து இருக்கும்.

தமிழகத்தில் சாதகமான சூழலை உருவாக்குவதே ஆட்சியாளரின் கடமை. ஜெயலலிதா ஆட்சியா தற்போது நடைபெறுகிறது? ஆட்சியில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்திற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களை சந்தித்தார். அப்போது கூட்டத்தில் மைத்ரேயன் பேசியதிலிருந்து கூட்டணி உறுதியாகிவிட்டது போல யூகிக்க முடிகிறதே என்ற கேள்விக்கு, ‘‘யூகங்களை கணிக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தல் வருமா, வராதா? என்பதை ஆட்சி யாளர்கள்தான் சொல்ல வேண்டும். எங்களுக்கு 2 கோரிக்கைகள் மட்டுமே. ஜெயலலிதாவின் மரணத் துக்கு நீதி விசாரணை வேண்டும். இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கமாக இருக்க வேண்டும்’’ என்று பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x