

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 38பேருக்கு மார்ச் 25 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டது.
கடந்த ஜனவரி 29 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாகக்கூறி 38 ராமேஸ்வரம் மீனவர்களையும் சிறைப்பிடித்து மீனவர்களின் 6 விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
சிறைப்பிடிக்கப்பட்ட 38 மீனவர்களையும் காங்கேசன் துறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரின் காவல் செவ்வாய்கிழமையோடு முடிவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.
மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி மகேந்திர ராஜா நான்காவது முறையாக காவலை நீட்டித்து மார்ச் 25வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 38 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
மார்ச் 13 அன்று கொழும்பில் இரு நாட்டு மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.