Last Updated : 26 Jun, 2017 12:09 PM

 

Published : 26 Jun 2017 12:09 PM
Last Updated : 26 Jun 2017 12:09 PM

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா புதுச்சேரியில் இரு நாட்கள் முகாம்

புதுச்சேரிக்கு தனி ஹெலிகாப்டரில் இன்று (திங்கள்கிழமை) வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரு நாட்கள் இங்கு தங்கியிருக்கிறார். கட்சியினர் தொடங்கி வர்த்தகர்கள் வரை சந்திப்பதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தாலும், புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு புதுச்சேரியில் ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார்.

அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதல் வலுவடைந்துள்ளது. இருவரின் மோதலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இரு நாள் பயணமாக அமித்ஷா இன்று தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி வந்தார்.

அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் மகேஷ்கிரி எம்.பி, பொறுப்பாளர்கள் சந்தோஷ், அரவிந்த் மேனன் உள்ளிட்டோரும் இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

புதுச்சேரியின் வளர்ச்சி என்ற நோக்கில் மோட்டார் பைக் பேரணி லாஸ்பேட்டையில் இருந்து புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஆளுநர் மாளிகை அருகேயுள்ள சுப்பிரமணிய பாரதியார் சிலையை வந்தடைந்தது. பின்னர் அமித்ஷா, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

சிறிது ஓய்வுக்கு பின்னர் லே ராயல் பார்க் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். கட்சியைப் பலப்படுத்துவது, குடியரசுத் தலைவர் தேர்தல், 2019-ம் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தனர். முக்கிய நிர்வாகிகள் 60 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பத்திரிக்கையாளர்கள் அனுமதியில்லை.

மாலையில் ஆனந்தா இன் ஓட்டலில் பல்வேறு தொழிலதிபர்கள், வணிகர்கள், சமூகநல அமைப்புகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன், புதுவையின் பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். .

நாளை காலை ஆரோவில் செல்லும் அமித்ஷா பின்னர் புதுச்சேரி திரும்பி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டு செல்கிறார். அமித்ஷா வருகையொட்டி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x