Published : 14 Nov 2014 09:05 AM
Last Updated : 14 Nov 2014 09:05 AM
காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 22-ல் முழுஅடைப்பு, ரயில் மறியல் போராட்டங்களுக்கு திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
திருவாரூரில் எ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், உறுப்பினர்கள் திருவாரூர் ஆர்.பழனிவேல், மன்னார்குடி டி.செல்வம், திருத்துறைப்பூண்டி ஜெயராமன், நீடாமங்கலம் ஜெயக்குமார், குடவாசல் ஜி.சேதுராமன், நன்னிலம் ஆர்.முருகேசன், கொரடாச்சேரி எம். ராமமூர்த்தி, முத்துப்பேட்டை எம்.ஜி.ராமச்சந்திரன், கோட்டூர் எம்.தெய்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், “காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் நோக்கோடு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டும் முடிவை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவை உடன் அமைக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 22-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருநாள் முழு அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்துவது” என முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT