Last Updated : 21 Nov, 2014 09:17 AM

 

Published : 21 Nov 2014 09:17 AM
Last Updated : 21 Nov 2014 09:17 AM

தமிழகம் முழுவதும் 286 புதிய பஸ்கள் முடக்கம்: இயக்கத்தில் விடாமலேயே வட்டி கட்டும் அவலம்

தமிழகம் முழுவதும் அரசு போக்கு வரத்துக் கழக அலுவலகங்களில் கடந்த 7 மாதங்களாக 286 புதிய பஸ்கள் முடக்கிவைக்கப் பட்டுள்ளன. கடன் பெற்று வாங் கப்பட்ட புதிய பஸ்களுக்கு, இயக் கத்தில் விடாமலேயே வட்டி செலுத் தப்படுகிறது. இதனால் போக்கு வரத்துக் கழங்களுக்கு தினமும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் குறிப்பிட்ட ஆண்டு கள் இயங்கி பழுதடைந்த பஸ்கள் மற்றும் வாழ்நாள் முடிந்த பஸ்களும் ஓரங்கட்டப்பட்டு, அந்த பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் சேர்க்கப்படும்.

கரூரில் உள்ள அரசு போக்கு வரத்துக் கழக கூண்டு கட்டுமானப் பிரிவில் புதிய பஸ்கள் கூண்டு கட்டப்பட்டு தயாரானதும், போக்கு வரத்துக் கழக கோட்டங்களுக்கு பஸ்கள் பிரித்து வழங்கப்படும். அந்த பஸ்கள் ஒவ்வொரு மண்டலங்களுக்கும், பின்னர், பணிமனைக்கும் ஒதுக்கீடு செய்யப் படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டுக்கு 10 முதல் 20 புதிய பஸ்கள் வீதம் போக்குவரத்துக் கழகங்களில் சேர்க்கப்பட்டு வரப்பட்டது.

286 பஸ்கள் முடக்கம்

கடந்த சில ஆண்டுகளாக புதிய பஸ்கள் விடுவது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் முழு வதும் 350-க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் போக்குவரத்து கழகங்களில் சேர்க்கப்பட்டன. ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மாநிலத்தில் 286 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, போக்குவரத்து கழக அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்ட லங்கள் அடங்கிய மதுரை கோட்டத்தில் மட்டும் 67 புதிய பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கில் இழப்பு

ஒரு பஸ்ஸின் விலை சுமார் ரூ.20 லட்சம். இந்த பஸ்களை வாங்கு வதற்கு தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு புதிய பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்த நாளிலிருந்து, வட்டி செலுத்த வேண்டும். மேலும், பதிவு நாளிலிருந்தே பஸ்ஸின் சேதமும் கணக்கிடப்படும். இந்த சூழலில்தான் மாநிலம் முழுவதும் 286 புதிய பஸ்கள் கடந்த 7 மாதங்களாக இயக்கப்படாமல் முடக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் இயக்கப்பட்டிருந் தால், டிக்கெட் வசூல் மூலம் இதுவரை போக்குவரத்துக் கழகத் துக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வருவாயிலிருந்து வட்டி செலுத்தியிருக்கலாம். தற்போது புதிய பஸ்களை இயக்காமலே, வட்டி செலுத்துவதால், போக்கு வரத்துக் கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எப்.சி.யிலும் சிக்கல்

பணிமனைகளுக்கு ஒன்றிரண்டு பஸ்களை ஒதுக்கீடு செய்யும்போது, அந்த பஸ்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தகுதிச்சான்று பெறுவது சுலபமானது. அதே நேரத்தில் மொத்தமாக பஸ்கள் ஒதுக்கீடு செய்யும்போது, ஒவ்வொரு பணி மனைக்கும் 5 முதல் 10 பஸ்கள் வழங்கப்படும். புதிய பஸ்களுக்கு 2-வது ஆண்டில் தகுதிச் சான்று பெற்றால் போதும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே நேரத்தில் 10 பஸ்களுக்கும் தகுதிச் சான்று பெறுவது எளிதல்ல. இதற்காக குறிப்பிட்ட நாள்கள் அந்த பஸ்கள் இயக்குவது நிறுத்தப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படும்.

இது குறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ஏற்கெனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. ஊழியர்களுக்கு பல கோடி ரூபாய் பணப்பலன்கள் பாக்கி வைக்கப்பட்டுள்ளன.

டீசல் விலை குறைவால் மிச்சமாகும் பணத்தை தொழிலாளர்களுக்கு பாக்கி வழங்க பயன்படுத்துவார்கள் என நம்பியிருந்தோம். ஆனால், சாலையில் ஓடாத பஸ்களுக்கு வட்டி கட்டி வருகின்றனர். புதிய பஸ்கள் சாலையில் இயங்கு வதற்குத் தயாராக இருந்தும், அவற்றை முடக்கி வைத்துள்ளனர். புதிய பஸ்களை விட்டால், பழைய பஸ்களுக்கான செல வீனம் கடுமையாகக் குறையும். தற்போது இயக்காமல் நிறுத்தப் பட்டிருப்பதால் புதிய பஸ்களும் சேதம் அடைந்து வருகின்றன. எனவே, யாருக்காகவும் காத்தி ருக்காமல் உடனடியாக அந்த பஸ்களை இயக்கத்தில் விட்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x