Last Updated : 04 Aug, 2016 09:58 AM

 

Published : 04 Aug 2016 09:58 AM
Last Updated : 04 Aug 2016 09:58 AM

மறைந்தாலும் மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் கருவிழி திட்டத்தால் விழி பெற்ற 500 பேர்

கருவிழி சேகரிப்புத் திட்டத்தின் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இறந்தவர்களிடம் இருந்து பெறப்படும் கருவிழிகளால் 500-க்கும் மேற் பட்டோர் பார்வை பெற்றுள்ளனர்.

பிறவியிலேயே பார்வை இழப்பு, இடையில் ஏற்படும் பாதிப்பு, சிறுவயதில் ஏற்படும் காயம், விபத்து, தவறான சிகிச்சை உட்பட பல்வேறு காரணங்களால் ஏராளமானோர் பார்வை இழக் கின்றனர். பார்வை இழந்தோருக்கு மாநில சுகாதாரத் துறை 2012-ம் ஆண்டில் ‘மருத்துவமனை கருவிழி சேகரிப்பு’ (ஆஸ்பிட்டல் கார்னியா ரிட்ரிவல்) எனும் திட்டத்தை அமல்படுத்தியது.

இத்திட்டம் சார்பில், மதுரை அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இறக்கும் நபர்களின் கருவிழிகளை சேகரித்து தேவைப்படுவோருக்கு பொருத்துகின்றன. மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பலனின்றி இறப்போரின் உறவினர்களிடம் பேசி, தகுதியான கண்களைத் தானமாக பெறுகின்றனர்.

இதற்காக கண் தான ஆலோ சகர்களாக இருவர் செயல்படுகின் றனர். தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரி சோதனை அறைக்குக் கொண்டு வரப்படும் உடல்களின் உற வினர்களிடம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி விழிகளை சேகரிக்கின்றனர். தானம் பெறும் கண்களை அரவிந்த் கண் சேமிப்பு வங்கி மூலம் பாதுகாத்து, தேவையானவர்களுக்குப் பொருத் துகின்றனர்.

இதுகுறித்து, அரசு ராஜாஜி மருத்துவமனை ‘ஆப்தமாலஜி’ துறைத் தலைவர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது: அரசு ராஜாஜி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் தினமும் குறைந்தது 4 பேர் வரை சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். இவர்களின் ஆரோக்கியமான கண்களைத் தானமாக சேகரிக்க, ஒருங்கிணைப்பாளர் சரவணன் மற்றும் 2 கவுன்சிலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

பிரேத அறைக்கு வரும் உடல்களின் குடும்பத்தினரிடம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம். இதற்கு சம்மதிக்கும் உடல்களில் இருந்து கருவிழிகள் சேகரிக்கப்படுகின் றன. இதற்கு சம்பந்தப்பட்ட உறவி னர் இருவர் ஒப்புதல் தரவேண்டும். இறந்த ஒருவரின் உடலில் இருந்து 4 முதல் 6 மணி நேரத்துக்குள் டாக்டர்களின் உதவியுடன் கருவிழிகளை அகற்றலாம்.

அவ்விழிகளை தேவையான நபருக்கு 24 மணி நேரத்துக்குள் பொருத்த வேண்டும். சில சூழலில் தாமதம் ஏற்பட்டால் பாதுகாப்பு வங்கியில் ஒரு வாரம் வரை வைத்து பொருத்தலாம். அரசு ராஜாஜி மருத்துவமனை மூலம் மாதம் 10 முதல் 12 கருவிழிகள் கிடைக்கின்றன. இவற்றில் 50 முதல் 70 சதவீதம் நல்ல நிலையில் உள்ளன.

இக்கருவிழிகள் அரவிந்த் கண் வங்கி மூலம் பாதுகாக்கப்படு கின்றன. இவற்றைக் கொண்டு, அரசு ராஜாஜி மருத்துவமனை யில் மாதம் சுமார் 30 பேருக்கு கருவிழிகள் பொருத்தப்படுகின் றன. அரவிந்த் கண் மருத்துவமனை மூலமும், தேவையான நபர் களுக்கு பொருத்த உதவுகிறோம். இத்திட்டம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 500-க்கும் மேற் பட்டோர் பார்வை பெற்றுள்ளனர்.

உயிருடன் இருக்கும்போது, பதிவு செய்து கண் தானம் செய்வது மிக குறைவு என்றாலும், பிரேதப் பரிசோதனைக்கு வரும் உடல்கள் மூலம் அதிகம் கருவிழிகள் சேகரிக்கப்படுகின்றன. இதுபற்றி மக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி உள்ளனர். கருவிழி திட்டம் குறித்து விளக்கி கண்தானம் செய்யக் கோரினால் சம்மதிக் கின்றனர்.

திண்டுக்கல், தேனியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இத்திட்டம் செயல்படுகிறது. இறந்த பின் மண்ணுக்குள் பயனற்று போகும் கண்களை, பிறருக்கு வழங்கி னால் அவர்கள் ஒளிபெறுவர். இத்திட்டத்தை அனைத்து மாவட் டங்களிலும் விரிவுபடுத்தினால் ஆயிரக்கணக்கானோர் பார்வை பெறுவர் என்றார்.

இந்தியாவில் பார்வையிழந்தவர்கள் எண்ணிக்கை 1.20 கோடிக்கும் அதிகம். ஒவ்வொருவரும் கண் தானம் செய்ய உறுதியெடுத்தால், இதுபோன்ற மனிதர்கள் வாழ்வில் ஒளியேற்றலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x