Published : 01 Dec 2013 04:48 PM
Last Updated : 01 Dec 2013 04:48 PM

வானிலை முன்னறிவிப்பு: 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல்: தென் கிழக்கு வங்கக் கடலில் இன்று (ஞாயிற்றுகிழமை) காலை உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நகர்ந்தால் தென் தமிழகத்தில் தொடங்கி சென்னை வரை மழை பெய்யக் கூடும்.

இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் ஏற்கனவே சனிக்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. இதுவும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறாக, அது இலங்கை நோக்கி சென்றுவிட்டால், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து தமிழகத்துக்கு குறைவான மழையே பெய்யும்.

இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலையும் வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ளதால், தமிழகத்துக்கு குறிப்பாக தென் தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும். அனைத்து மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் எனவும் ஆங்காங்கே கன மழை பெய்யும்.

சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் லேசான தூரலும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x