Published : 09 Apr 2017 06:52 AM
Last Updated : 09 Apr 2017 06:52 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்: ரூ.88 கோடி பட்டுவாடா ஆவணம் வெளியானதால் பரபரப்பு

அவசரமாக டெல்லி விரைந்தார் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் களுக்கு ரூ.88 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆவணங்களுடன் தமிழக சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக (அம்மா) அணியினர் பணம் பட்டுவாடா செய்வதாக திமுக, அதிமுக (புரட்சித்தலைவி அம்மா), பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் அந்த கட்சிகள் புகார் மனுக்களை அளித் துள்ளன.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ் கரின் வீடு, வணிக நிறுவனங்கள், கல்லூரிகள், அலுவலகங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். மேலும் சமக தலைவர் சரத்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 55 இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடந்தது.

இதில் ரூ.4 கோடியே 50 லட்சம் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக் கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அதிமுக அம்மா கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டதற் கான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியாயின. அந்தப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச் சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழக சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று மாலை விமானம் மூலம் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோதனையில் கிடைத்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அவரிடம் அளித்துள்ளதாகவும், அதை எடுத்துக் கொண்டு அவர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் இன்று காலை டெல்லி விரைகிறார். தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x