மகன் விடுதலைக்காக காத்திருக்கிறேன்: பேரறிவாளன் தந்தை

மகன் விடுதலைக்காக காத்திருக்கிறேன்: பேரறிவாளன் தந்தை
Updated on
1 min read

எனது மகன் விடுதலையாகி, வீட்டுக்கு வரும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் கூறினார்.

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை, அதியமான் நகரில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளனின் தந்தை ஞானசேகரன் (எ) குயில்தாசன் (73) ‘தி இந்து’விடம் கூறியது: ஆள்பவர்கள் அழிக்க நினைத்தாலும், நீதிமன்றம் எனது மகனைக் காப்பாற்றியுள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்பு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. எனது மகன் விடுதலையாகி வீட்டுக்கு வந்தால் மட்டுமே, முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும். அதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எனது மகனின் விடுதலைக்காக தமிழக மக்கள் போராட வேண்டும்.

ஒரு மனிதனுக்கு காதல் உணர்வு என்பது 19 வயது முதல் 26 வயது வரைதான். அந்த வயதையெல்லாம் சிறையிலேயே கழித்துவிட்டார். அவர் வெளியே வந்து, எங்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருப்பார். பேரறிவாளன் விடுதலையாகி வந்தவுடன், அவருக்குத் திருமணம் செய்து வைப்பேன்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், எனது மகனுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1989 வரை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பில் டிப்ளமோ படித்தவர் பேரறிவாளன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in