

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதம்:
வங்கக்கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் இயந்திர மீன்பிடிப் படகில் தங்களது பாரம் பரிய மீன்பிடிப் பகுதியான பாக் ஜல சந்திக்கு கடந்த 17-ம் தேதி சென் றுள்ளனர். அவர்கள் 18-ம் தேதி அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையின் கரைநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது தொடர்பாகவும், இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்களுக்கு பல முறை கடிதங்கள் எழுதியதை அறிவீர்கள். அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் ஆதரவுடன் நடைமுறைக்கு சாத்திய மான தீர்வு காண்பதற்கு எனது தலைமை யிலான அரசு உறுதி பூண்டுள்ளது. தமிழக மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப் படுவதைத் தவிர்க்கவும், மீனவர்களை விடு வித்து அவர்களது மீன்பிடிப் படகுகளை பயன் படுத்தக்கூடிய நிலையில் மீட்கவும் இலங்கை அரசு நிர்வாகத்தின் உயர் அதிகார நிலை யில் தலையிட வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.