

சர்வதேச இஸ்லாமிய பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கின் உரைகளை யூடியூபில் இருந்து நீக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய தவ்ஹீத் ஜமா அத் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கதேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவன், சர்வதேச இஸ்லாமிய பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு, இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளார் எனக் கூறி, ஜாகிர் நாயக்கின் உரைகளை யூடியூப்பில் நீக்கவும், அவரது சேனல்களை முடக்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், அனைத்து மதத்தின ரையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு எஸ்.எம்.பாக்கர் கூறினார்.