பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும்: செங்கோட்டையன்

பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும்: செங்கோட்டையன்
Updated on
1 min read

பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறும்போது, "கல்வித்துறையில் அரசு புரட்சியை உருவாக்கி வருகிறது. மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 26,913 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தவும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்கள் பாடத் திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும். எதிர்காலத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும்.

பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழகம் திகழும். 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை கல்வித்துறைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

பள்ளிக் கல்வித்துறைக்கு தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும் என்ற வேண்டுகோளையும் செங்கோட்டையன் முன் வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in