Published : 04 Jun 2017 12:11 PM
Last Updated : 04 Jun 2017 12:11 PM

தமிழகத்தில் முதல்முறையாக கோவை மத்திய சிறைக் காவலர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கல்

தமிழகத்தில் முதல்முறையாக கோவை மத்திய சிறைக் காவலர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது.

கோவை மத்திய சிறையில் 70 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா, சிறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மத்திய சிறைக் கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார் தலைமை வகித்து, 63 சிறைக் காவலர்களின் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார். மேலும், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, சிறைக் காவலர்களின் குழந்தைகளுக்கு சுவடுகள் என்ற நூலை வழங்கினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ், ஜெயிலர் எட்வின் சந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனை சார்பில், காவலர்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இது குறித்து சிறைக் கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார் கூறும்போது, “தமிழகத்திலேயே முதல்முறையாக சிறைக் காவலர்களின் குடும்பங்களுக்கு கோவை சிறையில்தான் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x