Published : 28 Oct 2015 03:18 PM
Last Updated : 28 Oct 2015 03:18 PM

தி இந்து செய்தி எதிரொலி: பொன்னம்மாளுக்கு தி.மு.க., காங். நிர்வாகிகள் ஆறுதல்

நிலக்கோட்டை அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். இவர் 7 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருமுறை சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி முதல் தற்போதைய தலைவர்களான ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வரை இணைந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளார்.

ஏ.எஸ்.பொன்னம்மாள் சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலே நீடித்து வருகிறார். இரு வாரத்துக்கு முன் மிகுந்த உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை நேற்று முன்தினம் வரை காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் சந்திக்கவில்லை. அரசு மருத்துவமனையில் சாதாரண நபராக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ‘தி இந்து’வில் திங்கட்கிழமை செய்தி வெளியானது.

இந் நிலையில், ஏ.எஸ்.பொன்னம்மாளை தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி நேற்று காலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் நேற்று ஏ.எஸ்.பொன்னம்மாளை சந்தித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு ஏ.எஸ்.பொன்னம்மாளின் உடல் நிலை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து தெரியவில்லை. அவரை சந்திக்க மேலிடத் தலைவர் விரைவில் வரவுள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x