Published : 31 Oct 2014 07:11 PM
Last Updated : 31 Oct 2014 07:11 PM

5 மீனவர்களின் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு: 13 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; விரைவில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் தீவில் உள்ள 11 மீனவ சங்க பிரதிநிகளும் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 மீனவர்களின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மாவட்ட மீனவர்களும் சனிக்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

மேலும் ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு இலங்கைக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க அழுத்தம் கொடுக்கத் தவறினால் நவம்பர் 7ம் தேதி அனைத்து விசைப்படகு மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்படும், என தீர்மானம் இயற்றப்பட்டது.

சீரான ரயில், பேருந்து போக்குவரத்து:

முன்னதாக வெள்ளிக்கிழமை மீனவர்கள் போராட்டங்களினால் அரசு, தனியார் பள்ளிகளுக்கு ராமேசுவரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை விடப்பட்டது. அதிகாலை ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. தங்கச்சிமடத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து ரயில் போக்குவரத்தும் சீரானது.

சுற்றுலா பயணிகள் தவிப்பு:

தீர்ப்பு வெளியானதில் இருந்து மீனவர்களின் போராட்டங்கள் வலுப்பெற்றதால், வியாழக்கிழமை மாலை முதலே ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்கள், பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணம் ரத்தானதால் இரவில் விடுதிகளிலும், ரயில்வே நிலையத்திலும் தங்க நேர்ந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x