Published : 21 Apr 2017 05:59 PM
Last Updated : 21 Apr 2017 05:59 PM

மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கோரி நடத்திவரும் போராட்டத்தை கைவிட நடவடிக்கை தேவை: தமிழிசை

மருத்துவ பட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிட தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசு மருத்துவர்கள் தங்களுக்கு உயர் படிப்பில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு அவர்களுக்கு கிடைத்த மேற்படிப்பின் பயனை அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை மக்களுக்கு பயன்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு ஏற்கெனவே 4,000 இடங்களை அதிகரிக்கச் செய்து பட்ட மேற்படிப்பு கல்வியை விரிவடையச் செய்திருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசு இந்த சூழ்நிலையை கவனமாக கையாண்டு மருத்துவர்களின் போராட்டத்தை கைவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பல சமானிய மக்கள் பாதிக்கப்படுவர் என்ற சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசு செயலாற்ற வேண்டும். போராட்டத்தால் நோயாளிகள் எந்தவித பாதிப்பும் அடையக் கூடாது'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x