

சென்னை மாநகர அரசு பேருந்துகளில் முதியோருக்கு நிரந்தரமாக இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் மாநகர பஸ்களில் முதியோர் இலவசமாக பயணம் செய்ய மாதந்தோறும் 10 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு டோக்கனை ஒரு முறை மட்டுமே (ஒரே பேருந்தில்) பயன்படுத்த முடியும். தற்போதுள்ள நிலையில், ஒரே பேருந்தில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வர முடியாது. பல பேருந்துகளில் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒரே டோக்கனை நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் மாற்றவேண்டும்.
டோக்கன்கள்
மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை டோக்கன்களை வழங்குவதற்கு பதில் முதி யோருக்கு நிரந்தரமாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கே.பரமா னந்தம் என்ற வாசகர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
மூத்த குடிமக்களுக்கான இலவச பாஸ் பெறுவதற்கு, விண்ணப்பம் கொடுக்க ஒரு நாளும், பாஸ் வாங்க மறுநாளும் அலைய வேண்டி யுள்ளது. மேலும் இதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது 3 மாதத்துக்கு ஒருமுறை டோக்கன்கள் பெற கவுன்ட் டர்களில் மணிக்கணக்கில் காத் திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதியோர்கள் அவதிப்படுகின் றனர். எனவே முதியோருக்கு நிரந்தரமாக பஸ் பாஸ் வழங்கி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கும்படி அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக போக்கு வரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழக அரசுதான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். பயணிகளின் கோரிக்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.