Published : 21 Apr 2017 09:39 AM
Last Updated : 21 Apr 2017 09:39 AM

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக பதவியேற்பு

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி வி.ராம மூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம் உள்ளிட்ட 11 பேர் கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களின் நியமனத்தை எதிர்த்து திமுக எம்பி டிகேஎஸ். இளங்கோவன், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில் இவர்கள் 11 பேரும் அதிமுக அனுதாபிகள். 7 பேர் அதிமுக வழக்கறிஞர் அணியில் இருப்பவர்கள். பெரும்பாலானோர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள். அரசியலமைப்பு சட்ட விதி முறைகளை மீறி இந்த நியமனம் நடந்துள்ளது என குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2016 டிசம்பரில், 11 பேரின் நியமனத்தையும் அதிரடி யாக ரத்து செய்தது. மேலும் இந்த பட்டியலில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமமூர்த்தியை தவிர்த்து மற்றவர்களின் தகுதிக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஆகவே மீண்டும் புதிதாக உறுப்பினர்களை நியமிக்கும்போது அவர்களின் தன்சுய விவரக்குறிப்பை முழுமை யாக ஆராய்ந்து அதன்பிறகே அவர்களை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், பொறியாளர் பி.கிருஷ்ணகுமார், மின்வாரிய ஓய்வு அதிகாரி ஏ.சுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர் வி.சுப்பையா, நாமக்கல் மாவட்ட முன்னாள் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.வி.பாலுசாமி ஆகிய 5 பேரை தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இவர்கள் 5 பேரும் நேற்று முறைப்படி டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x