Last Updated : 24 Feb, 2017 12:51 PM

 

Published : 24 Feb 2017 12:51 PM
Last Updated : 24 Feb 2017 12:51 PM

நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரும் மேலூர் தம்பதி தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க, மச்ச அடையாளங்கள் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்களை தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் எதிர்மனுதாரரான கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க மச்ச அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டியதுள்ளது.

இதனால் நடிகர் தனுஷ் பிப். 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x