

முறையான ஆலோசனை செய்து அரசு முடிவு எடுக்காததால், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக வைத்து, ஒரு மாதத்துக்குமேல் சுற்றுப் பயணத் திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதை நீதிமன்றத்திலே தெரிவித்து, வழக்கில் ஆஜராகாமல் இருக்க புதுப்புது வழிகளைத் தேடுகிறார். வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் சுற்றுப்பயண அறிவிப்பு போன் றவை அவசரமாக வெளிவர பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குதான் காரணம்.
ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதில், மூத்த வழக்கறிஞர் களிடம்கூட எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பெருமைதேடிக் கொள்ள முயன்றார்கள். மாநில அமைச்சரவை முடிவு குறித்து, மூன்று நாட்களுக்குள் மத்திய உள்துறை தீர்மானிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, மத்திய அரசுக்கே காலக்கெடு விதித்திருந்தார்.
முறையாக, ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்காமல் எப்போதும் போல எடுத்தேன், கவிழ்த்தேன் பாணியில் செயல்பட்டதால் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள்.
இவர்கள் காட்டிய அரசியல் அவசரம் ஆதாயம் என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இதற்குள் விடுதலையாகியிருக்க வேண்டியவர்கள், இன்னும் வெளிவர முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.