

விஜயகாந்த் தங்கள் தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காக அவரிடம் திமுக சார்பில் பேரம் பேசப்பட்டது உண்மையே என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்த செய்தி உண்மையாகும்.
ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்.
மறுபடியும் ஊழல் ஆட்சி வந்துவிடக் கூடாது என்று நினைத்திருக்கிறார். அதன் காரணமாகவே மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளார். நேர்மையைப் பற்றி சொல்லக் கூடிய முழுத் தகுதியுள்ளவர் விஜயகாந்த்.
தேமுதிக கட்சியோடு 28,29, 30 ஆகிய தேதிகள் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்கிறோம். ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த்தும், நாங்களும் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி புதிதாக கூட்டணிக்கு வருகிறவர்கள், விஜயகாந்த்தோடு பேசுவார்கள்" என்றார்.