

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீ பெய்டு மொபைல் போன் சந்தாதாரர்களுக்கு 'பிஎஸ்என்எல்-சிக்ஸர்' என்ற பெயரில் ரூ.666-க்கு சிறப்பு கட்டண வவுச்சரை (எஸ்டிவி) அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் விதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தனது ப்ரீ பெய்டு மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல்-சிக்ஸர்' என்ற பெயரில் ரூ.666-க்கு சிறப்பு கட்டண வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தில் அளவில்லா அழைப்புகள் மேற்கொள்வதோடு, 60 நாட்களுக்கு அளவில்லா டேட்டாவும் வழங்கப்படும். டேட்டா பயன்பாடு தினமும் 2 ஜிபியைத் தாண்டும்போது அதன் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மேலும், இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே அமலில் உள்ள 349, 333 மற்றும் 444 ஆகிய திட்டங்களுக்கு பிறகு மாறிக் கொள்ளலாம். இப்புதிய திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.